வேற எந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பது? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி.

சென்னையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- “இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெறும் 1,000 ஏக்கரில் மட்டும் சென்னை விமான நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 2.50 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாள்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 கோடியாகும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 73 விமான நிலையங்கள்தான் இருந்தது. ஆனால், இன்றைக்கு விமான நிலையங்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்று கேட்டார். அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூர், மாமண்டூர் உள்ளிட்ட இரண்டு ஊரின் பெயர்கள் இடம் பெற்றது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாமண்டூரை விட்டுவிட்டு பரந்தூர், பன்னூர் உள்ளிட்ட இரண்டு ஊரின் பெயர்களை அனுப்பினார்கள். அ.தி.மு.க., தி.மு.க. அரசு அனுப்பிய இரண்டு பட்டியலிலும் பரந்தூர் இருந்தது. மத்திய அரசு தானாக வந்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு எடுக்கவில்லை. விஜய் ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் அவர் அடுத்து எந்த இடத்தை பரிந்துரை செய்வார். சென்னை அருகில் விமான நிலையம் அமைக்க மூன்று ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேண்டும். எந்த இடத்தை தேர்வு செய்வது என்ற தீர்வையும் தரவேண்டும். ஆக்கப்பூர்வமாக பிரச்சினையை கையாண்டு அதற்கு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வர முடியும். விஜய் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற போகிறாரா? அல்லது நெருப்பை அணைத்துவிட்டு தீர்வை கொடுக்கப்போகிறாரா? என்பதுதான் முக்கியம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சொல்வது தவறு” என்றுத் தெரிவித்தார்.