தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு- மதுரையில் ஒரே நாளில் 10 செ.மீ. மழை பதிவு..!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரையில் நேற்று 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும்மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் (ஜூலை 4, 5) சில இடங்களிலும், வரும் 6, 7-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வரும் 6-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி,மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று (ஜூலை 3) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை தெற்கில் 10 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் 5 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ.வேகத்தில் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.