அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம். பெண்கள் உள்பட 200பேர் கைது.

கோவை; அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் முன் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் கனகராஜ் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் மனோகரன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் சாலை மறியலில் ஈடுபடமுயன்ற 10 பெண்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.