தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
மாணவர்கள் https://tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களது தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், பி.இ., மற்றும் பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு தமிழக அரசின் சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மதிப்பெண் அடிப்படையிலான பொது தரவரிசையும், தமிழக அரசின், 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஜாதி வாரியான தரவரிசையும் பட்டியலில் இடம் பெறும். இந்த தரவரிசை அடிப்படையில்தான், ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.
இதனையடுத்து வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, வரும் 25ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் பெயர்களையும் வெளியிட்டார். 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 36,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை. தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு சேர்க்கையில் 2% ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ,வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19-ம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் குறைகளை பதிவு செய்யலாம். குறைகள் நியாயமாக இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். 18004250110 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம்.