அப்பார்ட்மெண்டில் 4 -வது மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை..

கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூரை சேர்ந்தவர் சிவகுமார். இரும்பு வியாபாரி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். சிவகுமார் தனது குடும்பத்துடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருடைய மகள் ரஷ்யாவில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். மகன்ஹர்ஷவர்தன் ( வயது 15) கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் .அவருக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொது தேர்வு தொடங்குகிறது. இதனால் நன்றாக படித்து தேர்வு எழுதும் படி பெற்றோர் அவருக்கு அறிவுரை வழங்கினர் .இந்த நிலையில் அவர் படித்து வரும் பள்ளிக்கூடத்தில் பொது தேர்வுக்காக படிக்க வைத்தனர். அப்போதும் அவர் சரியாக படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஹர்ஷவர்தனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர் இதன்படி பெற்றோர் அவரை கண்டித்தனர் நேற்று முன் தினம் இரவில் அவரை பொதுத் தேர்வு படிக்க அறிவுரை வழங்கினார் ஆனால் அவர் படிக்காமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த பெற்றோர் அவரிடமிருந்து செல்போனை வாங்கிவிட்டு படிக்குமாறு கூறினார்கள். இதனால் மனக்கவலை அடைந்த ஹர்ஷவர்தன் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மேலும் அவர் இரவில் சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டில் பெற்றோர்கள் தூங்கியதும் நேற்று முன்தினம் நள்ளிரவில் கதவை திறந்த ஹர்ஷவர்தன் வெளிய வந்தார். அவரது 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார் இதில் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார் இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.