நீலகிரி மாவட்டத்தில், “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதி மொழி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தொழிலாளர் முறை ஒழிப்பு’ உறுதி மொழி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் (07.02.2025) ஏற்றுக்கொள்ளப்பட்டது. “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு. சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பினை முன்னிட்டு, கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ்குமார், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.