சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு வெளி நாடுகளிலிருந்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன் கள் கடத்தி வரப்படுவதாகவும், சுங்கச்சோதனை அதிகாரிகள் உதவியுடன் அவற்றை வெளியே எடுத்துச்செல்ல இருப்பதாகவும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் சுங்க விஜிலென்ஸ் தனிப்படை அதிகாரிகள், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த 2 விமானங்களில் வந்த 13 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் விஜிலென்ஸ் தனிப்படையினர் நிறுத்தி அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, தங்களிடம் ஏற்கனவே சுங்கச் சோதனை நடைபெற்று முடித்து விட்டதால் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய போலீசார் உதவியுடன், சுங்க அதிகாரிகள், அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.5 கோடி மதிப்புடைய, 2 கிலோவுக்கு மேற்பட்ட தங்க பசைகள் மற்றும் ஐபோன்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு, ஐபோன்களுக்கு சுங்க தீர்வையும் விதித்தனர். தொடர்ந்து பிடிபட்ட 13 பயணிகளிடமும் மேற்கொண்ட விசார ணையில், சுங்க அதிகாரிகள் சிலர் உதவியுடன் தான், இவர்கள் சோதனை இல்லாமல் கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்துவந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கடத்தலில் தொடர்புடைய சுங்கத்துறை சூப்பரண்டுகள் பரமானந்த் ஜா, சரவணன் ஆதித்யன், சுனில் தேவ் சிங்க், டல்ஜெட் சிங்க் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரும் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு, காத்திருப் போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீதும், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.